கோவை, டிச.11: இன்ஜினியரிங் தொழில்துறையில் மேற்கொள்ளப்படும் ஜாப் ஆர்டருக்கு ஜிஎஸ்டியில் விதிக்கப்பட்ட 18 சதவீதம் குறைக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக நடந்த 30 ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலும் நிறைவேறாமல் ஏமாற்றம் அளித்தது. இந்நிலையில் வரும் 22ம் தேதி நடைபெறவுள்ள 31வது கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டும், என்று காட்மா குறுந்தொழில் அமைப்பு எதிர்பார்க்கிறது. இது குறித்து கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோர் சங்கம் (காட்மா) இணை தலைவர் மகேஸ்வரன், பொது செயலாளர் சிவக்குமார் ஆகியோர் கூறியதாவது: கோவை, திருப்பூர் மாவட்டத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறுந்தொழில் நிறுவனங்கள் உள்ளது. இதில் 3.5 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். குறுந்தொழிற்கூடங்களில் ரயில்வே, ராணுவம் உள்பட பொதுத்துறை நிறுவனங்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் உள்பட பொறியியல் இன்ஜினியரிங் பொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து உதிரிபாகங்கள் ஜாப் ஒர்க் அடிப்படையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஜூலையில் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டியில் குறுந்தொழில் நிறுவனங்கள் மேற்கொள்ளும் ஜாப் ஒர்க்கிற்கு 18 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டது. ஜிஎஸ்டிக்கு முன்பு 5 சதவீத வாட் வரி மட்டும் இருந்த நிலையில், ஜிஎஸ்டி வரி உயர்வால் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குறுந்தொழிற்கூடங்களுக்கு கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக ஜாப் ஒர்க் 40 சதவீதம் சதவீதம் வரை குறைந்தது. இதனால் குறுந்தொழிற்கூடங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.