கோவை,டிச.11: உக்கடம் கழிவுநீர் சுத்திகரிப்பு பண்ணையின் குழாயில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கலெக்டரிடம் சோசியல் டெமாக்ரடிக் ட்ரேடு யூனியன் அமைப்பினர் மனு அளித்தனர். இது குறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: உக்கடம் கழிவுநீர் பண்ணையில் சுத்திகரிப்பு செய்து வெளியேற்றப்படும் கழிவுநீர் முறையாக குழாய் அமைக்கப்படாமல் கொண்டு செல்லபடுவதால் அப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து தேங்கி நிற்கிறது. இதனால், அங்கு கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும், எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி, இதற்கு தீர்வு காண வேண்டும், இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.