ஈரோடு, டிச. 11: தென்னிந்திய நுகர்வோர் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாநில அமைப்பாளர் வீரபத்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில துணை செயலாளர் பாபு கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். இந்த கூட்டத்தில் ஈரோடு மாநகர பகுதிகளில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்திற்காக ரோடுகள் தோண்டப்பட்டுள்ளது. ஆனால் பணிகள் முடிந்த பகுதியில் ரோடுகளை சீரமைக்காததால் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த ரோடுகளை உடனடியாக தார்சாலையாக மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், கோபி பகுதியில் பவானி ஆற்றில் அனுமதியின்றி மாட்டு வண்டிகள் மூலமாக மணல் திருட்டு நடந்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக மணல் திருட்டை தடுத்து நிறுத்த வேண்டும்.