ஆவடி, டிச.11: ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட அந்தோனி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆவடி நகராட்சி 13வது வார்டு திருமுல்லைவாயல் பகுதியில் அந்தோணி நகர் உள்ளது. இங்குள்ள 13 தெருக்களில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு சுமார் 1200க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 15 வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் உள்ள செப்டிக் டேங்கிலிருந்து கழிவுநீர் வெளியேறி தெருவில் ஓடுகிறது. இதனால் மக்கள் தெருவில் நடமாட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் கூறுகையில், அந்தோணி நகர் பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள செப்டிக் டேங்கில் இருந்து கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த கழிவுநீர் சாலை வழியாக வழிந்தோடி காலி இடங்களில் குளம்போல் தேங்கி நிற்கிறது. கடும் துர்நாற்றம் வீசுவதால் பாதசாரிகள் பிரதான சாலை வழியாக நடந்து செல்ல முடியவில்லை.