ஆவடி, டிச.11: ஆவடியில் குடும்பத்தினருக்கு இடையே ஏற்பட்ட சொத்து தகராறில் வீட்டில் வெடிகுண்டு வைத்து வெடிக்க செய்வதாக மிரட்டல் விடுத்த கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை தொலைபேசிஅழைப்பு வந்தது. அதில், பேசிய மர்மநபர், எனது வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளேன். சிறிது நேரத்தில் வெடிக்கும் என கூறியுள்ளார். மேலும், சம்பவ இடத்துக்கு கமிஷனர் நேரில் வரவேண்டும் என கூறிவிட்டு, இணைப்பை துண்டித்தார். இதையடுத்து போலீசார், அழைப்பு வந்த எண்ணை ஆய்வு செய்தனர். அதில், ஆவடி அடுத்த காமராஜர் நகர், பழைய ஜீவானந்தம் தெருவில் இருந்து பேசியது தெரிந்தது. ஆவடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். எஸ்ஐ பிரபாகரன் வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்றார். மோப்ப நாய் ரோஜாவும் வரவழைக்கப்பட்டு, அந்த வீட்டை சோதனை நடத்தினர்.