மன்னார்குடி, டிச. 7: கஜா புயலின் காரணமாக துண்டிக்கப்பட்ட மின்சாரம் 20 நாட்களுக்கு பிறகு சீரமைக்கப்பட்டு பெருகவாழ்ந்தான் கடைவீதிக்கு மின் இணைப்பு கொடுக்கப் பட்டதால் வர்த்தகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த 15ம் தேதி நள்ளிரவு கஜா புயலின் கோரத்தாக்குதலால் கோட்டூர் ஒன்றியப் பகுதிகள் முழுவதையும் புரட்டிப்போட்டது. இதனால் ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்தது. ஏராளமான டிரான்ஸ்பார்மர்கள் சேதம் அடைந்தன. இதனால் மின்தடை ஏற்பட்டது. மின்சாரம் இல்லாமல் குடிநீர் உட்பட மக்களின் 80 சதவீத அத்தியாவசிய தேவைகள் முற்றிலுமாக முடங்கியது. இதனால் அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து மின்துறை அதிகாரிகள் வெளிமாவட்டத்தில் இருந்து வந்த மின்வாரிய ஊழியர்களுடன் இணைந்து போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டனர்.