மண்வளத்தை காக்க செயற்கை உரங்களை தவிருங்கள் கலெக்டர் அட்வைஸ்

காரைக்குடி, டிச. 7: காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் தோட்டக்கலை துறை சார்பில் மண்வள தினத்தை முன்னிட்டு பயிர்களில் சாகுபடி தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடந்தது. தோட்டக்கலைதுறை இணை இயக்குநர் ராஜேந்திரன் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் துவக்கி வைத்து பேசுகையில், ‘‘சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை நல்ல மண்வளம் உள்ள பகுதியாக உள்ளது. மண் துகள்களுக்கு இடையே அதிக மான இடைவெளி இருந்தால் தான் காற்றோட்டம் சிறப்பாக இருந்து பயிர்கள் சிறப்பாக வளரும்.

 

இயற்கையிலேயே நல்ல மண்வளம் உள்ள நிலையில், பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் செயற்கை உரங்களை போட்டால் மண் மலடாகி விடும்.இயற்கை உரங்களை அதிகளவில் பயன்படுத்த வேண்டும். மண்ணை வளப்படுத்த மண்புழு உரம் பயன்படுத்த வேண்டும். குன்றக்குடி வேளாண் அறிவியில் நிலையம் இயற்கை விவசாயத்திற்கு அதிகளவில் ஊக்குவிப்பது பாராட்டக்கூடியது’’ என்றார்.குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய தலைவர் செந்தூர்குமரன் பேசுகையில், ‘‘நிலைத்த நீடித்த விவசாயத்திற்கு மண் மிக அவசியம். இன்னும் 60 ஆண்டுகளுக்குள் மேல்மட்ட மண் முழுவதும் சுரண்டப்படும் என ஆய்வு தெரிவித்துள்ளது. அப்படி சுரண்டப்பட்டு விட்டால் மண்மாசு ஏற்படுவது தவிர்க்கமுடியாததாகிவிடும்.

தேவைக்கு அதிகமாக பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட உரம், பூச்சிமருந்து பயன்படுத்துவது, தொழிற்சாலை கழிவுகள் மண்மாசுக்கு காரணமாகின்றன.

உழவனின் நண்பன் மண்புழு. ஆனால் மண்புழுக்கள் மண்ணில் வாழ முடியாத நிலை உருவாகி உள்ளது’’ என்றார். இதில் கிராமிய பயிற்சிமைய இயக்குநர் அப்பாத்துரை மற்றும் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். முன்னதாக இயற்கை மண் புழு உரம் ஏற்றுமதியாளரான அரளிக்கோட்டையை சேர்ந்த சீத்தாலெட்சுமிக்கு இயற்கை பெண் விவசாயி விருதும், அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டது .

Related Stories: