கஜா புயலால் உப்பள பகுதியில் அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை விரைவில் அகற்ற வேண்டும் உப்பு வியாபாரிகள் வலியுறுத்தல்

வேதாரண்யம்,டிச.7: வேதாரண்யம் சிறு குறு உப்பு உற்பத்தியாளர்கள் இணையம் மற்றும் வேதாரண்யம் உப்பு உற்பத்தி மற்றும் வியாபாரிகள் சங்க கூட்டம் இணை தலைவர் முன்னாள் எம்எல்ஏ மீனாட்சிசுந்தரம் தலைமையில் நடந்தது. இணை செயலாளர் செந்தில் வரவேற்றார். உப்பு உற்பத்தி மற்றும் வியாபாரிகள் சங்க தலைவர் வேதரத்னம் முன்னிலை வகித்தார். இதில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட உப்பளங்களுக்கு ஏக்கர் 1க்கு 1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், உப்பள பகுதியில் அறுந்து கிடக்கு மின் கம்பங்களை விரைவில் அகற்றி போக்குவரத்து நடைபெற ஏதுவாக சாலையை செப்பனிட்டு தர வேண்டும், வேலையில்லாமல் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் சிறு குறு உப்பு உற்பத்தியாளர்கள் இணையம் மற்றும் உப்பு உற்பத்தி மற்றும் வியாபாரிகள் சங்கத்திலிருந்து முன்னாள் எம்எல்ஏ மீனாட்சிசுந்தரம், முன்னாள் எம்பி ராஜேந்திரன் ஆகியோரை தலைவராக கொண்டு குழு அமைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் தன்யகுமார், தென்னரசு, அம்பிகாதாஸ், வேதரத்தினம் உட்பட உப்பு உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: