குலசேகரம், டிச.7: பேச்சிப்பாறை அருகே சம்பள பணத்துடன் சென்ற சூப்பர்வைசரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட மூகமூடி திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர்.மார்த்தாண்டம் அருகே உள்ள பள்ளியாடி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (23). இவர் அரசு ரப்பர் கழக ஒப்பந்தக்காரர் ஒருவரிடம் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் காலை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக, பிரகாஷ் குலசேகரத்தில் இருந்து குற்றியாறு நோக்கி பைக்கில் சென்றார்.மோதிரமலை அருகே உள்ள கோதமடக்கு பகுதியில் சென்றபோது, அங்கு முகமூடி அணிந்து கொண்டு நின்ற 2 பேர் பைக்கை தடுத்து நிறுத்தினர். பின்னர் பிரகாசை மிதித்து கீழே தள்ளினர். கீழே விழுந்ததும் அவரிடம் இருந்த பையை பறித்தனர். அதில் ₹2500 இருந்தது. பின்னர் அவரது செல்போனை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனர்.