தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்

திருப்பூர்,டிச.7: திருப்பூர் சந்திராபுரத்தில் சாக்கடை கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவுநீரால்  நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சி 3வது மண்டலத்துக்கு உட்பட்ட சந்திராபுரம் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் பெரும்பாலான வீதிகளில், சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் வெளியேறாமல் குளம் போல் தேங்கி உள்ளது. துப்புரவு பணியாளர்கள், வாய்க்காலை சுத்தம் செய்யாமல் இருப்பதால், கழிவுநீரும், குப்பையும் தேங்கியுள்ளன. இதனால், கடும் துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,`சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் குளம் போல் தேங்கி கொசு உற்பத்தியாகிறது. இதனால், குழந்தைகள் மற்றும் முதியோருக்கு அடிக்கடி காய்ச்சல் ஏற்படுகிறது. தேங்கியுள்ள கழிவுநீரை வெளியேற்ற, பலமுறை கோரிக்கை விடுத்தும் மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இனியும் தாமதம் செய்யாமல், கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: