கோவில்பட்டி, டிச.6: ஜெயலலிதா 2ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு கோவில்பட்டியில் அவரது படத்திற்கு அமைச்சர் கடம்பூர்ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கோவில்பட்டியில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2ம் ஆண்டு நினைவுநாள் அனுஷ்டிக்கப்பட்டது. இதையொட்டி கோவில்பட்டி அண்ணா பஸ்நிலையம் முன்பு மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு அலங்கரிக்கப்பட்ட பந்தலில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவபடத்திற்கு அமைச்சர் கடம்பூர்ராஜூ மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னாள் மத்திய அமைச்சர் கடம்பூர் ஜனார்த்தனம், அதிமுக நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரைபாண்டியன், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கணேஷ்பாண்டியன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் அருணாசலசாமி, வெள்ளைத்துரை, கூட்டுறவு சங்க துணை தலைவர் செண்பகமூர்த்தி, ரமேஷ், வேலுமயில், அன்புராஜ், பாலமுருகன், ரத்தினவேல், ஆபிரகாம் அய்யாத்துரை, போடுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் கோவில்பட்டி நகரின் 36 வார்டு பகுதிகளிலும் அதிமுகவினர் ஜெயலிலதா உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தூத்துக்குடி: ஜெயலலிதா 2ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட அதிமுக சார்பில் மவுன ஊர்வலம் நடந்தது. தூத்துக்குடி மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் தலைமையில், அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் மவுன ஊர்வலம் நடந்தது. குரூஸ்பர்னாந்து சிலை முன்பு துவங்கிய இந்த ஊர்வலம் பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு நிறைவடைந்தது. அங்கு ஜெயலலிதாவின் திருவுருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜு நிருபர்களிடம் கூறுகையில், ‘ முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு முழு உருவ வெண்கல சிலை விரைவில் அமைக்கப்படும்’ என்றார்.