லாரி மோதியதில் உடல் நசுங்கி பள்ளி மாணவி பலி

கீழ்ப்பாக்கம்: கீழ்ப்பாக்கத்தில் தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். கீழ்ப்பாக்கம் மண்டபம் 1வது தெருவில் வசித்து வருபவர் உமன் மேத்யூ. இவரது மகள் ஜெனிமா அச்சு மேத்யூ (12). கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தாள்.நேற்று காலை தனது சித்தப்பாவுடன் பைக்கில் பள்ளிக்கு புறப்பட்டாள். நியூ ஆவடி சாலை தாமோதரன் தெருவில் சென்றபோது, சென்னை குடிநீர் வாரிய அலுவலகத்தில் இருந்து தண்ணீர் ஏற்றி சென்ற லாரியை முந்தி சென்றார்.

அப்போது, எதிரே வந்த மாநகர பஸ் மீது, ஜெனிமா அச்சு மேத்யூவின் புத்தக பை உரசியது. இதில் நிலைத்தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். அந்த நேரத்தில் பின்னால் வந்த தண்ணீர் லாரி, ஜெனிமா அச்சு மேத்யூ மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவள், ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தாள். சித்தப்பா லேசான காயத்துடன் உயிர் தப்பினார். தகவல் அறிந்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். விபத்தை ஏற்படுத்திய திருவள்ளூரை சேர்ந்த தண்ணீர் லாரி டிரைவர் கோவிந்தராஜ் (26) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: