திமிரி அருகே 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்பு

ஆற்காடு, டிச.7: திமிரி சஞ்சீவராயன்பேட்டை 1வது தெருவைச் சேர்ந்தவர் கணபதி. இவரது மனைவி சுசீலாம்மாள்(65). இவர் நேற்று மதியம் அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு நடந்து சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தார். கிணற்றில் சுமார் 20 ஆழத்தில் தண்ணீர் இருந்தது. கிணற்றில் விழுந்த வேகத்தில் மேலே வந்த அவர் பம்பு செட் பைப்பை கெட்டியாக பிடித்து கொண்டு கூச்சலிட்டார். சத்தம் கேட்ட பொதுமக்கள் ஆற்காடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தந்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் பொறுப்பு ஹரிகிருஷ்ணன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து சுமார் அரை மணி நேர போராடி சுசீலாம்மாளை உயிருடன் மீட்டனர்.பின்னர், 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சைக்கு பின்பு நலமுடன் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்த விஏஓ சக்கரவர்த்தி மற்றும் திமிரி போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.

Related Stories: