மதுராந்தகம், டிச.7: மதுராந்தகம் அடுத்த மேலவலம்பேட்டை - வேடந்தாங்கல் நெடுஞ்சாலையில் மதுராந்தகம் போலீசார் இரு தினங்களுக்கு முன் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக அந்த வழியாக வந்த 2 பைக்குகளை மடக்கி விசாரித்தனர். அப்போது, பைக்கை ஓட்டி வந்த வாலிபர்கள் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். இதையடுத்து, போலீசார் அவர்களை மதுராந்தகம் காவல்நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் ஜமின் எண்டத்தூர் பகுதியை சேர்ந்த சதீஷ் (20), மதுராந்தகத்தை சேர்ந்த புனிதா (20) என்று தெரியவந்தது. இவர்கள் மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பூட்டிய வீடுகளை உடைத்து கொள்ளை அடிப்பது, பைக் திருட்டு உள்ளிட்டவைகளில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 3 பைக், 1.5 சவரன் தங்கம் மற்றும் 80 கிராம் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர், போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.