ஆம்பூர், டிச.7: ஆம்பூர் நகராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து நகராட்சி அதிகாரிகள் ஆம்பூர் பஜார், பைபாஸ் சாலை, கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் நேற்று காலை திடீர் சோதனை மேற்கொண்டனர்.நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி தலைமையிலான குழுவினர் சிறுவணிக வளாகங்கள், வர்த்தக நிறுவனங்கள், ஹார்டுவேர் கடைகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை செய்தனர். அப்போது 50 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்தனர். துணிப்பைகளை பயன்படுத்த வியாபாரிகளை அறிவுறுத்தினர். மேலும், துணிப்பைகளை பயன்படுத்தும் வியாபாரிகளை ஆணையாளர் பாராட்டினார். வாடிக்கையாளர்களுக்கு விளக்க துண்டு பிரசுரங்களை கடைகளில் வினியோகம் செய்தனர்.அப்போது துப்புரவு அலுவலர் பாஸ்கர், துப்புரவு ஆய்வாளர் சுப்பிரமணி, உதவியாளர் அன்பு உட்பட சுகாதார பிரிவினர் உடன் இருந்தனர்.