சிவகாசி, டிச.6: சிவகாசி நகராட்சி ஞானகிரி ரோட்டில் வாறுகால் சேதமடைந்து கழிவுநீர் தெருக்களில் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதாரக் கேடு, தொற்றுநோய் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சிவகாசி நகராட்சி 7வது வார்டில் கருப்பணன் தெரு, வள்ளலார் தெரு, காரனேசன் காலனி, பழனியாண்டவர் காலனி, ஞானகிரி ரோடு பகுதிகள் உள்ளன. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த வார்டில் உள்ள ஞானகிரி ரோட்டில் வாறுகால்கள் சேதமடைந்து இடிந்து கிடக்கிறது. இதனால் மழை காலங்களில் கழிவு நீர் சாலைகளில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இந்த பகுதியில் பெண்கள் பள்ளி உள்ளது. பள்ளி மாணவிகள் இந்த சாலை வழியாகத்தான் வந்து செல்கின்றனர். கழிவு நீர் குளம் போல் தேங்குவதால் மாணவிகள் சிரமப்படுகின்றனர். மேலும் இப்பகுதியில் சுகாதார கேடு ஏற்படுவதால் மாணவிகள் மற்றும் பொது மக்களுக்கு தொற்றுநோய் பரவும் ஆபத்து உள்ளது. எனவே வாறுகாலை சரி செய்து கழிவுநீர் தேங்குவதை சரி செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.