கம்பம் குடியிருப்பு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு எதிர்ப்பு

கம்பம், டிச. 6: கம்பம் நகராட்சி வாரச்சந்தை குடியிருப்பு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களிடம் நேற்று நகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் பொதுமக்கள் உடன்படாததால் அதிகாரிகள் திரும்பிச்சென்றனர்.

கம்பம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. நாள்தோறும் சேகரமாகும் குப்பைகளை நகராட்சி நிர்வாகம் கையாளுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. குப்பைகளால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதையடுத்து நகராட்சி பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நகராட்சிக்குட்பட்ட காமாட்சி கவுடர் நகர், முகைதீன் ஆண்டவர்புரம், நந்தகோபால்சாமி நகர், வாரச்சந்தை பகுதி, ஆங்கூர்பாளையம் சாலையில் உள்ள பழைய குப்பை கிடங்கு ஆகிய பகுதியில் மக்கும் குப்பையில் இருந்து நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் திட்டப்பணி செயல்படுத்தப்பட உள்ளது. ஒரு சில இடங்களில் பணிகள் முடிவடைந்துள்ளன.

இந்நிலையில் கம்பம் வாரச்சந்தைப்பகுதியில் நடைபெற்று வரும் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திடக்கழிவு மேலாண்மை திட்ட பணியை கைவிடக்கோரி நேற்று முன்தினம் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதையடுத்து நேற்று கம்பம் நகராட்சி கமிஷனர் சங்கரன் தலைமையில், நகராட்சி பொறியாளர், மேலாளர், சுகாதார அலுவலர், மற்றும் அதிகாரிகள் அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்கள் கூறுகையில், ‘‘இப்பகுதியில் அங்கன்வாடி மையம், குடியிருப்புகள், ஆரம்ப சுகாதார நிலையம், வாரச்சந்தை, பள்ளி உள்ளது. பாதுகாப்பான இப்பகுதியில் இந்த திட்டத்தை செயல்படுத்தினால் சுகாதாரம் பாதிக்கப்படும், சுற்றுச்சூழல் பாதிப்படையும், துர்நாற்றம் வீசும் அதனால் இப்பகுதியில் இத்திட்டத்தை செயல்படுத்தக்கூடாது. அதற்காக நடைபெற்று வரும் பணிகளை உடனே நிறுத்த வேண்டும். பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி இத்திட்டத்தை செயல்படுத்தினால் அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம்’’ என்றனர்.

 

ஆணையாளர் சங்கரன் கூறுகையில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகராட்சி, மாநகராட்சிகளில் இந்த திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. தற்போது திருச்சி, வேலுர், பம்மல், மறைமலைநகர் உள்ளிட்ட பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளிலேயே இந்த நுண் உர செயலாக்க மையம் அமைக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இருக்காது, துர்நாற்றம் வராது. இந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ள இடத்தைச் சுற்றி தோட்டம் அமைக்கப்பட்டு செடிகள் வளர்க்கப்பட்டு பசுமை காக்கப்படும்.  இதன் மூலம், மக்காத குப்பைகள், மக்கும் குப்பைகள் முறையாகப் பிரிக்கப்பட்டு நகரம் தூய்மையாக பராமரிக்கப்படும்.

மக்காத குப்பைகள் (பிளாஸ்டிக் போன்றவை) சிமென்ட் பேக்டரிக்கு அனுப்பப்படுகிறது. இந்த மையங்களில் தயாராகும் உரங்கள் விவசாயிகளுக்கும் வழங்கப்படும் என்றார். ஆனால் அதிகாரிகளின் பேச்சுக்கு அப்பகுதி மக்கள் செவிசாய்க்காததால், பின்பு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

Related Stories: