மன்னார்குடி, டிச. 6: திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்தில் கஜா புயல் மிக பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தியது. 49 ஊராட்சிகள் உள்ளடக்கிய இந்த ஒன்றியத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களே அதிக அளவில் உள்ளனர். புயலின் கோரப்பிடியில் சிக்கி பல்லாயிரக் கணக்கான தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தது. இதனால் விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து வேதனையில் உள்ளனர். சேதமடைந்த தென்னை மரங்களுக்கு அரசு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தியும் வருகின்றனர். இந்நிலையில் கோட்டூர் வட்டார வேளாண்மை அலுவலகத்தின் சார்பில் ஒன்றியம் முழுவதும் தமிழக வேளாண்மை உதவி இயக்குனர் பால சவுந்தரி தலைமையில் சென்னையில் இருந்து வந்த சிறப்பு குழு ஒன்று புயலால் சேதமடைந்த தென்னை மரங்கள் உள்ள பகுதிகளுக்கு சென்று தனது ஆய்வு பணிகளில் ஈடுபட்டது.