வேதாரண்யம்,டிச.6: கஜா புயலால் வேதாரண்யம் பகுதி கடற்கரைக்கு தள்ளப்பட்ட சேற்றை அப்புறப்படுத்தும் பணியை அரசு முதன்மை செயலாளர் ராதாகிஷ்ணன் ஆய்வு செய்தனர். நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கஜாபுயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் நடை பெற்று வரும் சீரமைப்பு பணிகளை அரசு முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதலாவதாக தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நாலுவேதபதி கிராமத்தில் புயலால் சேதமடைந்த மின்கம்பங்கள் சீரமைக்கும் பணியினை பார்வையிட்டு பணிகளை விரை ந்து முடிக்க மின் பணியாளர்களை ஊக்கப்படுத்தினார். மேலும் மின் சீரமைப்பு பணிகளுக்கு தேவையான மின்கம்பம், மின் உதிரிபாகங்கள் கையிருப்பு குறித்தும், கூடுதல் பணியாளர்களுக்கான தேவை குறித்தும் மின்வாரிய அலுவலர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து நாலுவேதபதி, புஷ்பவனம் கிராமங்களில் கஜா புயலின் போது ஏற்பட்ட கடல் சீற்றத்தால் அலைகள் மூலம் கரைப்பகுதிக்கு தள்ளப்பட்ட சேற்றுமணலை, வேளாண் பொறியியல் துறையினர், தனியார் தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் அப்புற ப்படுத்தும் பணியினை பார்வையிட்டார்.