திருவிடைமருதூர் அருகே வாலிபர் தற்கொலை முயற்சியால் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நிறுத்தம் உறவினர்கள் அதிர்ச்சி

திருவிடைமருதூர், டிச. 6: திருவிடைமருதூர் அருகே வாலிபர் தற்கொலை முயற்சியில் நேற்று நடக்கவிருந்த நிச்சயதார்த்தம் நிறுத்தப்பட்டது. இதனால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அடுத்த திருநாகேஸ்வரம் சன்னாபுரம் வெள்ளாள தெருவை சேர்ந்த சேட்டு மகன் சிலம்பரசன் (30). இவர் கடந்த 5 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சன்னாபுரத்தில் உள்ள உறவினரின் பெண்ணை சிலம்பரசனுக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் ேகட்டு வந்தனர். அதன்படி பெண்ணின் பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து திருநாகேஸ்வரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நேற்று நடப்பதாக இருந்தது. இதற்காக நேற்று முன்தினம் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு சிலம்பரசன் வந்திருந்தார்.

இதைதொடர்ந்து திருமண மண்டபத்தில் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடு நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் வீட்டில் தூக்கிட்டு சிலம்பரசன் தற்கொலைக்கு முயன்றார். அப்போது அவரது உறவினர்கள் பார்த்து சிலம்பரனை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைதொடர்ந்து சிலம்பரசன் தற்கொலைக்கு முயன்றதால் நிச்சயதார்த்தம் நிறுத்தப்பட்டது. இதனால் இருவீட்டாரின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

Related Stories: