பொன்னமராவதி, டிச.6: பொன்னமராவதியில் பொதுக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை (நாளை) 7ம் தேதிக்கு மேல் திரிந்தால் பிடித்து செல்லப்படும் என கால்நடை உரிமையாளர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பொன்னமராவதி பஸ் நிலையம் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் அதிக அளவு மாடுகள், ஆடுகள், நாய்கள் சுற்றித்திரிகின்றது. இதனால் பஸ்கள் மற்றும் வாகனங்கள் சென்றுவர இடையூராக உள்ளது. மேலும் பொதுமக்கள் கால்நடைகளுக்கு பயந்து அச்சத்துடன் சென்று வருகின்றனர். பேரூராட்சி மூலம் பலமுறை அறிவிப்புகள் செய்தும் கால்நடைகளை உரிமையாளர்கள் தொடர்ந்து
வெளியில் விட்டுவிடுகின்றனர். இதனையடுத்து 7ம் தேதிக்கு மேல் பொன்னமராவதி பேரூராட்சி பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளை அதன் உரிமையாளர் சாலை மற்றும் பஸ் நிலைய பகுதிகளில் விடக்கூடாது. அதனையும் மீறி விட்டால் அந்த கால்நடைகளை பிடித்து சென்று சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொன்னமராவதி போலீசார் எச்சரித்துள்ளனர்.