வெள்ளனூர் அருகே மினி பஸ் கவிழ்ந்து 6 பேர் காயம்

புதுக்கோட்டை, டிச.6: புதுகை அடுத்த வெள்ளனூர் அருகே மினி பஸ் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் காயமடைந்தனர். புதுக்கோட்டையில் இருந்து அண்டக்குளத்திற்கு மினி பஸ் ஒன்று சென்றுள்ளது. இதில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனர். இந்த பஸ்சை கீரனூரை சேர்ந்த ஜெயராஜ் (55) என்பவர் ஓட்டியுள்ளார். பஸ் மச்சுவாடியில் இருந்து அண்டக்குளம் செல்லும் சாலையில் சென்றபோது  டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த இடையப்பட்டியை சேர்ந்த வீராச்சாமி (65), விஜயபுரத்தை சேர்ந்த பாக்கியம் (65), இடையப்பட்டியை சேர்ந்த இந்து (15) கடையக்குடியை சேர்ந்த லெட்சுமி (60), வடுகன்வயலை சேர்ந்த பிரகதம்மாள் (35), கடையப்பட்டியை சேர்ந்த சபிதா(19) ஆகிய 6 பேரும் காயமடைந்தனர்.இதனையடுத்து அவ்வழியாக சென்றவர்கள் விபத்து குறித்து வெள்ளனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்த 6 பேரையும் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: