அரியலூர்,டிச,6: அரியலூர் மாவட்டத்தில் 318 நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். கலைஞர்களுக்கு அரசாணை எண் 114 சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் (பண்2) துறையின்படி ஒரு மாவட்டத்திற்கு பத்து கலைஞர்களை தேர்வு செய்து அவர்களுக்கு இலவசமாக இசை கருவிகள் மற்றும் ஆடை, ஆபரணங்கள் வழங்கிட தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச இசைக்கருவிகள் மற்றும் ஆடை ஆபரணங்களை பெறுவதற்கு நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு பெற்றிருக்க வேண்டும். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ரூ.10 கட்டணம் செலுத்தி புதுப்பித்திருக்க வேண்டும். ஏற்கனவே இத்துறையின் வாயிலாக இலவச இசை கருவிகள் பெற்றிருத்தல் கூடாது. அரியலூர் மாவட்டத்தை சார்ந்த தகுதியுடைய கலைஞர்கள் தங்களுக்கு தேவையான இசைக்கருவிகள் ஆடை, ஆபரணங்கள் குறித்து விண்ணபத்தினை நலவாரியப்புத்தக நகலுடன் தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, 12வது வார்டு, கதவு எண் 5, ராதாகிருஷ்ணன் தெரு, கே.சி.காம்ப்ளக்ஸ், விளாமுத்தூர் ரோடு, பெரம்பலூர் என்ற முகவரியில் 30.12.2018ஆம் நாளுக்குள் நேரடியாகவோ தபால் மூலமோ அளித்திட வேண்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலே தெரிவித்த நாளுக்கு பிறகு வரப்பெறும் விண்ணப்பங்கள் தேர்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.