விருத்தாசலம், டிச. 6: விருத்தாசலம் அடுத்த பெண்ணாடத்தில் இயங்கி வரும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே ஆதிதிராவிட மாணவர்கள் விடுதி உள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி அருகேயுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த விடுதி கடந்த 2007ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது ரூ.31 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் 10 அறைகளுடன் கூடிய 2மாடிகள் கட்டப்பட்டது. இந்நிலையில் விடுதியின் முன்பகுதி மற்றும் பின்பகுதி பராமரிப்பின்றி செடி, கொடிகள் வளர்ந்து விவசாய நிலம்போல் காட்சியளிக்கிறது. இதனால் விஷஜந்துக்கள் நடமாடும் பகுதியாக உள்ளது. மேலும் மாணவர்களுக்கு சாலை வசதி, சுற்றுப்புற சுகாதார வசதி மற்றும் பாதுகாப்பு வசதிகள் இன்றி அவதியடைந்து வருகின்றனர். பள்ளிக்கும் விடுதிக்கும் சுமார் 10அடி தூரம் மட்டுமே உள்ள நிலையில் சுமார் 1கிலோ மீட்டர் தூரம் சுற்றி மாணவர்கள் சென்று வருகின்றனர். பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டும்போது, விடுதிக்கு போக நுழைவு வாயில் அமைக்கப்பட்டது. ஆனால் எந்தவித காரணமும் இன்றி நுழைவு வாயில் மூடப்பட்டதால் மாணவர்கள் நீண்ட தூரம் சென்று பள்ளிக்கு வருகின்றனர்.