ஸ்ரீமுஷ்ணம், டிச. 6: கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தேத்தாம்பட்டு கிராமத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகளின் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையம் உள்ளது. இதில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடம் என்பதால் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் தற்போது பெய்து வரும் பருவமழையால் இக்கட்டிடத்தின் உள்ளே மழைநீர் தேங்கி, சுற்றுச்சுவர்கள் அனைத்தும் பலவீனமடைந்தும் காணப்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கு சரியான முறையில் பாடம் கற்பிக்க முடியாத சூழல் நீடித்து வந்தது. ஆகையால் மாவட்ட ஆட்சியர், இத்துறைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து பேசி இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய அங்கன்வாடி மைய கட்டிடத்தை அகற்றிவிட்டு, அவ்விடத்திலேயே புதிய அங்கன்வாடி மையக்கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன் தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது.