மரக்காணம், டிச. 6: பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளை அப்படியே பொது இடங்களில் போட்டு விடுகின்றனர். இதுபோல் போடப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் மண்வளம், சுற்றுச்சூழல், குடிநீர் போன்றவை பாதிக்கப்படுகிறது. இதனால் மனிதர்கள் மட்டும் அல்லாமல் விலங்குகளுக்கு கூட பாதிப்பு உண்டாகிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனாலும் பொதுமக்கள் இந்த பிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டு வருகின்றனர். இதனால் ஒரு சில பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது.மரக்காணம் பேரூராட்சி சார்பில் செயல் அலுவலர் ராஜீ தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள் இப்பகுதியில் உள்ள முக்கிய இடங்களில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என துண்டுபிரசுரம் விநியோகம், ஆட்டோ விளம்பரம் போன்றவைகள் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.மேலும் வரும் ஜனவரி மாதம் முதல் டீக்கடை, ஓட்டல், கறிக்கடை, பாஸ்ட் புட், துணிக்கடை, மளிகை கடை, மீன் மார்க்கெட், வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது, மீறி பயன்படுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.