கார் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

விழுப்புரம், டிச. 6: விழுப்புரம் பாணாம்பட்டு அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்தவர் சுவாமிநாத அய்யர் மகன் வைத்தியநாதன் (38). இவருக்கு திருமணமாகி விட்டது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர். வைத்தியநாதன் சொந்தமாக கார் வாங்கி ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் கார் ஓட்டி வந்தார். மேலும் பல இடங்களில் கடன் வாங்கி இருந்ததாக தெரிகிறது. கடன்சுமை அதிகரித்ததால் காரை விற்று கடன்காரர்களுக்கு கொடுத்து வந்தார். அதன் பின்னரும் கடன்சுமை தீரவில்லை. மேலும் வேலைவாய்ப்பும் இல்லாததால் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இதனிடையே நேற்று முன்தினம் நள்ளிரவில் மனைவி, குழந்தைகளுடன் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த வைத்தியநாதன் நள்ளிரவில் மற்றொரு அறைக்கு சென்று மனைவியின் சேலையால் தூக்கு போட்டு தொங்கினார்.  

நேற்று காலை அவரது மனைவி எழுந்து பார்த்தபோது கணவரை காணாமல் திடுக்கிட்டார். மற்றொரு அறைக்கு சென்றபோது அங்கு தனது கணவர் தூக்கில் பிணமாக தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: