புதுச்சேரி, டிச. 6: பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி புதுவை மற்றும் காரைக்காலில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992 டிசம்பர் 6ம்தேதி இடிக்கப்பட்டது. இதனால் இரு பிரிவினருக்கு இடையே பயங்கர கலவரம் ஏற்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6ம்தேதி எவ்வித அசாம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்கு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. புதுவையில் பஸ் நிலையங்கள், ரயில் நிலையம், கோயில்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.