கலசபாக்கம், டிச.6:கலசபாக்கம் அருகே நடந்த ஜெயலலிதா நினைவு நாள் நிகழ்ச்சியில் பெண்கள் ஒப்பாரி வைத்து கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2ம் ஆண்டு நினைவு நாளையொட்டி நேற்று, எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் ஏற்பாட்டின்பேரில், கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம், புதுப்பாளையம், ஜமுனாமரத்தூர், போளூர் ஆகிய ஒன்றியங்களில் அதிமுகவினர், ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.கலசபாக்கம் எம்எல்ஏ அலுவலகத்தில் இருந்து, எம்எல்ஏ பன்னீர்செல்வம் தலைமையில் ஏராளமான அதிமுகவினர் மவுன ஊர்வலம் சென்றனர். பின்னர், கலசபாக்கம் பஸ் நிறுத்தம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கு எம்எல்ஏ மலர்தூவி மரியாதை செலுத்தினார்.