ஊட்டி, டிச.4: ஊட்டியில் இருந்து காந்திப்பேட்டை வழியாக கொல்லிமலை கிராமத்திற்கு செல்லும் சாலை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். ஊட்டி அருகே கொல்லிமலை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கோத்தர் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்தை சுற்றிலும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. அதேபோல், விவசாய நிலங்களும் அதிகளவு உள்ளன. ஊட்டியில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் காந்திப்பேட்டை பகுதியில் இருந்தே இந்த கிராமத்திற்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்திருந்த நிலையில், இச்சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.இதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன் அதிகரட்டி பஞ்சாயத்து நிர்வாகம் இச்சாலையை சீரமைக்கும் முயற்சிகளை மேற்க்கொண்டது. ஆனால், இச்சாலை முழுமையாக சீரமைக்கப்படவில்லை.
சாலையில் உள்ள பள்ளங்களில் ஜல்லி கற்கள் கொண்டு நிரப்பப்பட்டது. ஆனால், தொடர்ந்து சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ளப்படவில்லை. இதனால், காந்திப்பேட்டை பிரிவில் இருந்து லைப் அண்ட் லைட் அகடமி வரையில் உள்ள சுமார் 2 கி.மீ., தூரம் வரை சாலை மிகவும் மோசமாக உள்ளது. செங்குத்தான இச்சாலை பழுதடைந்துள்ள நிலையில், சிறிய வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் போன்ற சிறிய வாகனங்கள் சென்றால் பழுதடைந்து விடுகிறது. இதனால், கொல்லிமலை, ஓரநள்ளி, சேமந்தாடா, செல்வீப் நகர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
கேத்தி பாலாடாவை சுற்றிக் கொண்டு செல்வதால் பண விரயம் மற்றும் எரிப்பொருள் செலவும் அதிகரிக்கிறது. எனவே, இச்சாலையை உடனடியாக சீரமைக்க அதிகரட்டி பேரூராட்சி நிர்வாகம் அக்கரை செலுத்த வேண்டும் என கொல்லிமலை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.