திருவண்ணாமலை அருகே சிறுமியை திருமணம் செய்ய முயன்ற வாலிபர் போக்சோவில் கைது

திருவண்ணாமலை, டிச.4: திருவண்ணாமலை அருகே சிறுமியை திருமணம் செய்ய முயன்ற வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரும் செங்கம் தாலுகா கொட்டக்குளம் அம்மன் கோயில் ெதருவை சேர்ந்த தமிழரசன்(23) என்பவரும் கடந்த 2 மாதங்களாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் குறித்து சிறுமியின் பெற்றோருக்கு சமீபத்தில் தெரியவந்தது. அதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே, சிறுமியை திருமணம் செய்து கொள்வதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு, தமிழரசன் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவிட்டது.

அதன்பேரில், திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார். அதில், சிறுமியை திருமணம் செய்து கொள்வதற்காக தமிழரசன் அழைத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து, தமிழரசன் போக்சோ சட்டத்தில் கைது செய்தார். சிறுமியை மீட்டு திருவண்ணாமலை பெரும்பாக்கம் சாலையில் உள்ள அரசு கருணை இல்லத்தில் ஒப்படைத்தார்.

Related Stories: