ஊட்டியில் பூத்து குலுங்கும் செர்ரி மலர்கள்

ஊட்டி, நவ.30: ஊட்டி - குன்னூர் சாலையோரங்களில் பூத்துக் குலுங்கும் செர்ரி மலர்கள் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருகிறது.

 ஜப்பான் நாட்டில் காணப்படும் செர்ரி மலர்கள் நீலகிரி மாவட்டத்தில் அதிகம் காணப்படுகிறது. குளிர் பிரதேசங்களில் காணக்கூடிய இந்த மரங்கள், குளிர் காலத்தின் போது பூக்கக் கூடியவை. ஜப்பானின் வசந்த காலத்தை வரவேற்கும் இந்த மலர்கள் ஜப்பான் நாட்டின் தேசிய மலராக உள்ளது.

 தற்போது நீலகிரி மாவட்டத்தில் பனிக்காலம் துவங்கியுள்ள நிலையில், சாலையோரங்களில், தேயிலை தோட்டங்களின் நடுவே உள்ள இந்த மரங்கள் பூத்து குலுங்குகின்றன. இந்த மரங்களில் மலர்கள் கொத்து கொத்தாக பூத்துள்ளது.

மேலும், மரத்தில் இலைகளே இன்றி மரம் முழுக்க இளஞ்சிவப்பு நிற பூக்களாக காட்சியளிக்கிறது. இந்தியாவில், ஊட்டி மற்றும் இமயமலை போன்ற பகுதிகளில் காணப்படுகிறது.  தற்போது ஊட்டியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் வேலிவியூ பகுதியில் உள்ள செர்ரி மரத்தில் மலர்கள் பூத்துள்ளதால், இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து புகைப்படமும் எடுத்துச் செல்கின்றனர்.

Related Stories: