திருவண்ணாமலை அருகே பாலியல் தொல்ைல புகார் தனியார் குழந்தைகள் காப்பகத்தில் நடந்தது என்ன? சிறுமிகள் பரபரப்பு வாக்குமூலம்

திருவண்ணாமலை, நவ.30: பாலியல் தொல்லை புகாரை தொடர்ந்து, திருவண்ணாமலையில் உள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில் நடந்தது என்ன? என்பது பற்றி சிறுமிகள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். திருவண்ணாமலை அடுத்த கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தில் தனியார் குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த காப்பகத்தை திருவண்ணாமலை திருவள்ளுவர் நகரை சேர்ந்த லூபன்குமார்(65), அவரது மனைவி மெர்சிராணி(55), மணவாளன்(60) ஆகியோர் நடத்தி வந்தனர். இந்த காப்பகத்தில் 6 வயது முதல் 19 வயது வரையிலான 47 சிறுமிகள் தங்கி இருந்தனர். இந்நிலையில், கடந்த 17ம் தேதி கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி காப்பகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, காப்பகத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து காப்பகத்தில் இருந்த சிறுமிகள் திருவண்ணாமலை பெரும்பாக்கத்தில் உள்ள வரவேற்பு இல்லத்துக்கு மாற்றப்பட்டனர். மேலும், இந்த சிறுமிகளிடம் நடத்திய விசாரணையில், அவர்களில் சில சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து, காப்பகத்தை நடத்தி வந்த லூபன்குமார் உட்பட 3 பேரும், ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

இதில் பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து சிறுமிகளிடம் விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இந்த காப்பகத்தில் தங்கி இருந்தவர்களில் 3 சிறுமிகள் தாய், தந்தையை இழந்தவர்கள். அவர்களது உறவினர்கள் இந்த காப்பகத்தில் சேர்த்துள்ளனர். இந்த 3 சிறுமிகளையும் காப்பகத்தை நடத்தியவர்கள் தனி அறையில் பூட்டி வைத்து, அதிகளவு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இவர்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து கண்ணீருடன் கூறி கதறி அழுதனர். அவர்கள் இன்னும் இந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. காப்பகத்தை நடத்தியவர்கள் சொல்லும் வேலைகளை செய்யாவிட்டால், மேலும் கொடுமைப்படுத்தி உள்ளனர்’ என்றார்.

Related Stories: