தண்டராம்பட்டு, நவ.30: தண்டராம்பட்டு அருகே சாலையோர பள்ளத்தில் பள்ளி பஸ் கவிழ்ந்து 6 மாணவர்கள் உட்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த சின்னையன் பேட்டை கிராமத்தில் தனியார் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை தானிப்பாடி கிராமத்தை சேர்ந்த டிரைவர் காமராஜ்(40) பள்ளி பஸ்சில் வழக்கம்போல் வேப்பூர் செக்கடி கிராமத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு அழைத்து வந்தார். வேப்பூர் செக்கடி பெருமாள் கோயில் வளைவு பகுதியில் வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.