அரியலூர்,நவ.28: உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.2.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அரியலூர் கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார். அரியலூர் மாவட்டத்தில் 2017-18ம் நிதியாண்டில் கூட்டுப்பண்ணை திட்டத்தின் கீழ் வேளாண்மைத்துறை மூலம் 165 உழவர் ஆர்வலர் குழுக்களும், 33 உழவன் உற்பத்தியாளர் குழுக்களும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 110 உழவர் ஆர்வலர் குழுக்களும், 22 உழவன் உற்பத்தியாளர் குழுக்களும் என மொத்தம் 275 உழவர் ஆர்வலர் குழுக்களும், 55 உழவன் உற்பத்தியாளர் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. 6 வட்டாரங்களிலுள்ள 55 வருவாய் கிராமங்களில் 5400 சிறு, குறு விவசாயிகளை கொண்டு இக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 18 உழவன் உற்பத்தியாளர் குழுக்களை இணைத்து 2 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தோட்டக்கலைத்துறை சார்பில் அரியலூர் ஸ்ரீகலியுக வரதராஜ பெருமாள் கூட்டுப்பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனமும், செந்துறை கூட்டுப்பண்ணைய உற்பத்தியாளர் நிறுவனமும் உருவாக்கப்பட்டுள்ளது.