பெரம்பலூர்,நவ.15: பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், மாநில திட்டக்குழு உறுப்பினர் செயலருமான அனில்மேஷ்ராம் ஆய்வு செய்தார் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், ஆலத்தூர், பெரம்பலூர், வேப்பந்தட்டை வேப்பூர் உள்ளிட்ட 4 ஒன்றியங்கள் மற்றும் பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, கல்வித்துறை மற்றும் பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள்குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடந்தது. கலெக்டர் சாந்தா முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், மாநில திட்டக்குழு உறுப்பினர் செயலருமான அனில்மேஷ்ராம் தலைமை வகித்து ஆய்வுசெய்தார். அதனடிப்படையில் மாவட்டத்தில் வேளாண்மைத்துறை சார்பாக பயிர்செய்யப்பட்டுள்ள மொத்த பரப்பளவு, பயிர் வகைகள், விவசாயிகளுக்குத் தேவையான வேளாண் கருவிகள், உரங்கள் இருப்பு குறித்தும், கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டங்கள், பயனாளிகளின் எண்ணிக்கை குறித்தும் ஆய்வு செய்தார்.
ஊரகவளர்ச்சித்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் சோலார் மின் வசதியுடன் கூடிய பசுமைவீடுகள் கட்டும் திட்டம், தாய் திட்டத்தின் மூலம் கிராமப் புறங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்கள், தேசிய ஊரக வேலை வாய்ப்புத்திட்டம், ஆண், பெண் சுகாதார வளாக கட்டுமானப்பணிகள் செயல்பாடு மற்றும் வருவாய்த்துறை, பள்ளிக் கல்வித்துறை, சத்துணவுத்துறை, பள்ளிக்கல்வித்துறை, உணவுபாதுகாப்பு, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்படுத்தப் பட்டுவரும் திட்டங்களின் நிலைகுறித்து ஆய்வுசெய்தார். அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில் தாமதம் ஏற்படக்கூடாது, மாவட்டத் தின் வளர்ச்சிக்காக தமிழ்நாடுஅரசு அறிவித்துசெயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் குறித்த காலத்திற்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் வகையில் அனைத்துத் துறை அலுவலர்களும் முழுப்பங்களிப்பை தரவேண்டும் என்று அறிவுறுத்தினார். பின்னர் ஆலத்தூர் தாலுகா, செட்டிக்குளத்தில் இயங்கிவரும் வெங்காய வணிக வளாகத்தில் வெங்காயத்திலிருந்து ஊறுகாய், வெங்காய கூழ், உப்புக்கரைசலில் ஊரவைத்த வெங்காயம் உள்ளிட்ட மதிப்புகூட்டுதல் பொருட்கள் தயாரிக்கும்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். ஆய்வின் போது எஸ்பி திஷாமித்தல், மாவட்ட வருவாய்அலுவலர் அழகிரிசாமி, மாவட்ட திட்ட இயக்குநர் ஸ்ரீதர், மகளிர் திட்டஇயக்குநர் தேவநாதன், வருவாய்கோட்டாட்சியர் விஸ்வ நாதன் வேளாண்இணைஇயக்குநர் (பொ)கலைவாணி உள்ளிட்ட பல்வேறு துறை அலு வலர்கள் உடனிருந்தனர்.
ஆய்வுக்காக திறப்பு விவசாயிகள் வியப்பு சின்னவெங்காய மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிப்பு மையம் தொடங்கிய 1 மாதத்தில் மூடப்பட்டு கடந்த ஆறேழு மாதங்களாக செயல்படாமல் பயன்பாடின்றி இருந்து வந்தது. ஆய்வுக்காக திடீரென செயல்படுவதுபோல் தயாரித்து நாடகமாடியது கண்டு சின்ன வெங்காய விவசாயிகள் வியப்பும், அதிர்ச்சியும் அடைந்தனர்.