மயிலாடுதுறையில் துலா உற்சவ திருக்கல்யாண வைபவம்

மயிலாடுதுறை, நவ.15:  மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களும் துலா உற்சவம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இவ்வாண்டு கடந்த மாதம் 18ம் தேதி துலா மாத பிறப்பு தீர்த்தவாரியுடன் விழா தொடங்கியது. இதில் முக்கிய விழாவாக கடந்த 7ம் தேதி அமாவாசை தீர்த்தவாரியும், கொடியேற்றமும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அதனையொட்டி அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு திருமணக்கோலத்தில் முன்மண்டபத்திற்கு எழுந்தருளினர். மாலை மாற்றுதல், ஊஞ்சல் உற்சவம், சுமங்கலிபெண்கள் திருஷ்டி கழிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

திருவாவடுதுறை ஆதீனம் 24வதுகுருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் அம்பலவாணதம்பிரான் சுவாமிகள், சிவபுரம் வேதசிவாகம பாடசாலை நிறுவனர் சாமிநாதசிவாச்சாரியார் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். அதனை தொடர்ந்து இன்று (15ம் தேதி) திருத்தேரோட்டமும், நாளை (16ம் தேதி) கடைமுக தீர்த்தவாரி பெருவிழாவும் நடைபெறுகிறது.

Related Stories: