சித்தாமூர் அருகே ஷேர் ஆட்டோ கவிழ்ந்து 9 பெண்கள் படுகாயம்

செய்யூர், நவ 15: சித்தாமூர் அருகே மாடு குறுக்கே வந்ததால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த 9 பெண்கள் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சித்தாமூர் அடுத்துள்ள நீர்பெயர் கிராமத்தில் இருந்து 9 பெண்கள், நேற்று மாலை 4 மணியளவில் ஷேர் ஆட்டோவில் பெருவேலி கிராமத்தில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். அவர்கள் வந்த ஷேர் ஆட்டோ கொளத்தூர் கிராமம் அருகே வந்தபோது மாடு ஒன்று சாலையை கடக்க குறுக்கே ஓடி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால், மாடு மீது மோதாமல் இருக்க ஷேர் ஆட்டோ டிரைவர் திடீர் பிரேக் போட்டார். இதனால், ஆட்டோ கட்டுபாட்டை இழந்து சாலையோரம் சென்று கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோவில் வந்த 9 பெண்களும் கிழே விழுந்து பலத்த காயமடைந்தனர். ஆட்டோர் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். உடனடியாக அங்கிருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ்கள் மூலம் மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்து குறித்து சித்தாமூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான ஷேர் ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர்.

Related Stories: