பெரியபாளையம் அருகே இடிந்து விழும் ஆபத்தில் அங்கன்வாடி மையம்

ஊத்துக்கோட்டை, நவ.15: பெரியபாளையம் அருகே சந்திராபுரம் கிராமத்தில்  செடி கொடிகள் படர்ந்து பழுதடைந்து காணப்படும் அங்கன்வாடி மையத்தால் குழந்தைகள் அச்சப்படுகின்றனர். பெரியபாளையம் அருகே முக்கரம்பாக்கம் அடுத்த சந்திராபுரம்  கிராமத்தில் சுமார் 25  வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு அதே பகுதியை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். இந்நிலையில், கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால் அங்கன்வாடி மைய சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது.  மழையில் நனைந்து கடந்த 3 வருடங்களாக வலுவிழந்து காணப்படுகிறது.மேலும், அங்கன்வாடி மைய வளாகத்தில் செடிகொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதில் உள்ள பூரான், தேள் உள்ளிட்ட விஷப்பூச்சிகள் அவ்வப்போது மையத்துக்குள் புகுந்து விடுவதால் மாணவ - மாணவிகள்  அச்சத்துடன் படித்து வருகிறார்கள். இதனால் தங்கள் பிள்ளைகளை பெற்றோர்கள் அங்கன்வாடிக்கு அனுப்ப தயங்குகின்றனர்.

இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு  அப்பகுதி மக்கள் மனு கொடுத்தனர். ஆனால் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், அங்கன்வாடி அருகில் உள்ள கை பம்பும், குடிநீர் தொட்டியும் பயன்பாடில்லாமல் உள்ளது. தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள சிறிய அளவு சின்டெக்ஸ் தொட்டியில் உள்ள தண்ணீரை மாணவர்கள் பயன் படுத்திக்கொள்கின்றனர். எனவே சம்மந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள், சந்திராபுரம் அங்கன்வாடி மையத்தை சீரமைத்தோ அல்லது புதிதாகவோ கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:  அங்கன்வாடி மையம் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலை உள்ளது. இந்த அங்கன்வாடி மையத்தின் மேல் தளம் சிதிலமடைந்து விரிசல் ஏற்பட்டுள்ளது. மழைபெய்தால் மழை நீர் வகுப்பறைக்குள் வருகிறது. மேலும், கட்டிடத்தில் அருகில்  செடிகொடிகள் படர்ந்து விஷப்பூச்சிகள் உள்ளது. இதனல் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு நாங்கள் அச்சத்தில் உள்ளோம். எனவே பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய மையம் கட்டித்தர வேண்டும் என கூறினர்.

Related Stories: