திருத்தணி, நவ. 15: திருத்தணி முருகனுக்கு நேற்று திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. இதையடுத்து சுமங்கலி பெண்களுக்கு பூ, பழம், மஞ்சள் கயிறு ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது. திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 9ம் தேதி கந்த சஷ்டி விழா துவங்கியது. இதையொட்டி ஒவ்வொரு நாளும் காலையில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. காவடி மண்டபத்தில் உள்ள ஆறுமுகசாமி சமேத வள்ளி, தெய்வானை உற்சவ சிலைகளுக்கு காலை, மாலை வேளைகளில் நறுமண மலர்களால் லட்சார்ச்சனை நடைபெற்றது. இதை நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்து வழிபட்டனர். கடந்த 9ம் தேதி தங்க கவசம், 10ம் தேதி திருவாபரணம், 11ம் தேதி வெள்ளி கவசம், 12ம் தேதி சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது. இதையடுத்து நேற்று முன்தினம் காலை லட்சார்ச்சனையும் மாலை 5 மணிக்கு முருகப்பெருமானுக்கு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற்றது. இரவு 8 மணியளவில் வள்ளி, தெய்வானை சமேதராக முருகன் பல்லக்கில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிலையில்,நேற்று காலை 10 மணியளவில் முருகப்பெருமானுக்கும் தெய்வானைக்கும் திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சிகள் துவங்கின.