அரூர், நவ.14: அரூர் கீரைப்பட்டியில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே கீரைப்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கீரைப்பட்டி, வாழைத்தோட்டம், வள்ளி மதுரை, செல்வசமுத்திரம், எல்லபுடையாம்பட்டி, கெளாப்பாறை, குடுமியாம்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து தினந்தோறும் 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். மாதந்தோறும் 20 பிரசவம் பார்க்கப்படுகிறது. கட்டட வசதி இல்லாததால் ஊராட்சிக்கு சொந்தமான கட்டடத்தில், ஆரம்ப சுகாதாரநிலையம் தற்போது செயல்பட்டு வருகிறது. இங்கு போதிய வசதிகள் இல்லாததால், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கட்டடம் கட்டுவதற்கு நிலம் தேர்வு செய்யப்பட்டு ₹40 லட்சம் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் 4 ஆண்டுகளாகியும் இதுவரை பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதிகளவில் குக்கிராமங்களுடன் மலைகள் அடிவாரத்தில் உள்ள மக்களின் நலனை கருத்தில் கொண்டு, மேம்பட்ட வசதிகளுடன் விரைவில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணியை தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.