மணப்பாறை, நவ.14: திமுக அரசு செய்த திட்டங்களை எல்லாம் அதிமுக அரசின் திட்டங்கள் போல் தம்பிதுரை விளம்பரம் செய்கிறார் என்று சுப்புலட்சுமி ஜெகதீசன் குற்றம்சாட்டினார். மணப்பாறை சட்டமன்ற தொகுதி திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கே.என்.நேரு தலைமை வகித்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை 4 வருடமாக தொகுதி பக்கமே வராமல் இருந்துவிட்டு, தற்போது தேர்தல் வரும்போது அதிகாரிகளை அழைத்துக்கொண்டு ஊர், ஊராக சென்று பொதுமக்களிடம் மனுக்களை வாங்குகிறார். திமுக அரசு செய்த திட்டங்களை எல்லாம் அதிமுக அரசு செய்த திட்டங்கள் போல் விளம்பரம் செய்கிறார். பல இடங்களில் பொதுமக்கள் அவருக்கு கடுமையாக எதிர்ப்பு தொிவிக்கின்றனர். வருகின்ற சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் திமுக மகத்தான வெற்றியை பெறும். இவ்வாறு அவர் கூறினார்.