குன்னூர், நவ. 14: குன்னூர் நகராட்சிக்குட்பட்ட வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள நகராட்சி நிலத்தை ஆக்கிரமித்து 3 கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தன. இதையடுத்து நகராட்சி கமிஷனர் சரஸ்வதி உத்தரவின் பேரில் நகராட்சி ஊழியர்கள் அக்கட்டிடங்களை இடிக்கும் பணியை நேற்று மேற்கொண்டனர். இதற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் நகராட்சி நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 3 கட்டிடங்களை முழுமையாக இடித்து அகற்றினார்கள்.
அதிகாரிகள் கூறுகையில், நகராட்சி நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றும் பணி தொடர்ந்து நடக்கும், என்றனர். இதனிடையே ஆக்கிரமிப்பு பணியின் போது அங்கு முற்றுகையிட்ட பொதுமக்கள், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிம்ஸ்பார்க் பகுதியில் ஆளுங்கட்டியினரின் கடைகள் அகற்றப்பட்ட போது ஆளுங்கட்சி எம்.பி., எம்.எல்.ஏ., தலையீட்டதன் காரணமாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை நிறுத்தினார்கள். பொதுமக்களுக்கு ஒரு பிரச்னை என்று எம்.பி., எம்.எல்.ஏ.,வை அழைத்தால் கண்டுகொள்வதில்லை என குற்றம்சாட்டி கோஷமிட்டனர்.