கோவை, நவ. 14: கோைவயில் கழன்றுகிடந்த ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எதுவும் திருடு போகவில்லைஎன வங்கிஅதிகாரிகள் கூறியுள்ளனர்.
கோவை பாப்பநாயக்கன்பாளையம், மகளிர் பாலிடெக்னிக் அருகே ஒரு வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுக்க சென்றபோது, ஏடிஎம் இயந்திரத்தின் மேல் பகுதி கழன்று கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது கொள்ளையர்களின் செயலாக இருக்கலாம் என நினைத்து, இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
ரேஸ்கோர்ஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், வங்கி அதிகாரிகளுடன் சென்று ஏ.டி.எம். மையத்தில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தார். முடிவில், ஏ.டி.எம். இயந்திரத்தில் இருந்து பணம் எதுவும் கொள்ளை போகவில்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறும்போது, ‘‘காலை 9.20 மணி அளவில் குறிப்பிட்ட ஏ.டி.எம். சென்டரில் ரூ.5 லட்சம் ரொக்கப்பணம் இயந்திரத்தில் லோடு செய்யப்பட்டது. அதன் பின்னர் இயந்திரத்தின், மேல்பாகத்தை ஊழியர்கள் சரியாக அழுத்தம் கொடுத்து மூடாததால் தானாக அதன் மேல்பாகம் மட்டும் திறந்துள்ளது. இயந்திரத்தில் இருந்த பணம் எதுவும் திருடு போகவில்லை’ என்றனர்.