சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வண்ணபூரணி வனசுற்றுலா திட்டம் மீண்டும் துவங்குகிறது

சத்தியமங்கலம்,  நவ.14. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை,  காட்டெருமை, மான், காட்டுப்பன்றி, செந்நாய், கழுதைப்புலி உள்ளிட்ட பல்வேறு  வகை விலங்குகள் வசிக்கின்றன. வனஉயிரின சரணாலயமாக இருந்த இவ்வனப்பகுதி கடந்த  2013 ம் ஆண்டு புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து  புலிகள் காப்பகத்திற்கான திட்டங்கள் ஒவ்வொன்றாக அமல்படுத்தப்பட்டு  வருகிறது. இந்நிலையில் புலிகள் காப்பகத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்கு  பயணிகளை அழைத்துச்செல்வதற்காக வண்ணபூரணி வனசுற்றுலா திட்டம் கடந்த 2017 ம்  ஆண்டில் தொடங்கப்பட்டது. புலிகள் காப்பகத்தில் உள்ள சத்தியமங்கலம்,  பவானிசாகர், தலமலை, டி.என்.பாளையம், ஆசனூர், கேர்மாளம், தாளவாடி ஆகிய 7  வனச்சரகங்களிலும் தனித்தனியாக வேன் மற்றும் ஜீப் உள்ளிட்ட வாகனங்களில் வார  இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை மற்றும் மாலை  நேரங்களில் என இருமுறை பயணிகளை அழைத்துச்சென்று வனப்பகுதியை பார்வையிட  அனுமதிக்கப்படுகிறது.

இதற்காக  முதியனூரிலிருந்து ஜூரகள்ளி வரை  பயணிக்க ஒரு நபருக்கு ரூ.650, சிக்கஹள்ளியிலிருந்து எத்துகட்டி பெட்டா வரை  பயணிக்க ரூ.400, திம்பத்திலிருந்து திப்புசுல்தான் கண்காணிப்பு கோபுரம் வரை  பயணிக்க ரூ.400, ஆசனூரிலிருந்து ஹூலிகெரப்பட்டி வரை பயணிக்க ரூ.650 ,  காராச்சிக்கொரையிலிருந்து தெங்குமரஹாடா வரை பயணிக்க ரூ.650,  திம்பத்திலிருந்து கோட்டாடை பிரிவு வரை பயணிக்க ரூ.650 ம்,  கேர்மாளத்திலிருந்து சூட்டிங் லாட்ஜ் ரோடு வரை பயணிக்க ரூ.650 கட்டணமாக  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் முன்பதிவு வசதி உள்ளதால் முன்பதிவு  செய்தும் சுற்றுலாப்பயணிகள் நேரடியாக வனத்துறை அலுவலகத்தை தொடர்புகொண்டு  முன்பதிவு செய்து வனச்சுற்றுலா சென்று வந்தனர். இந்நிலையில் சத்தியமங்கலம்  புலிகள் காப்பகத்தில் கடும் வறட்சி நிலவியதால் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்  வனச்சுற்றுலா திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. செப்டம்பர்  மாதம் முதல் வனப்பகுதியில்  தொடர்மழை பெய்ததால் காய்ந்து கிடந்த மரங்கள்  துளிர்விட்டு பச்சைப்பசேலென அழகாக காட்சியளிக்கிறது. இதையடுத்து  மீண்டும் வரும் 17 ம் தேதி சனிக்கிழமை முதல் வனச்சுற்றுலா திட்டம் மீண்டும்  தொடங்கப்பட உள்ளதாகவும், வனப்பகுதியை பார்வையிட விரும்புவோர் ஆன்லைனில்  முன்பதிவு செய்துகொள்ளலாம் என சத்தியமங்கலம் புலிகள் காப்பக அதிகாரிகள்  தெரிவித்தனர்.

Related Stories: