ஈரோடு, நவ. 14: 65வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகள் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நடந்தது. இதில் உயர்நிலைப்பள்ளி அளவில் இளைஞர், பெண்கள் மற்றும் நலிந்த பிரிவினருக்கான கூட்டுறவு அமைப்புகள் என்ற தலைப்பிலும், மேல்நிலைப்பள்ளி அளவில் கூட்டுறவு அமைப்புகள் வாயிலாக அரசு நலத்திட்டங்கள் மற்றும் வருவாய் அதிகரிப்பு என்ற தலைப்பிலும், கல்லூரி அளவில் கூட்டுறவு அமைப்புகள் வாயிலான திறன் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு என்ற தலைப்பிலும் நடத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து கட்டுரை போட்டியில் உயர்நிலைப்பள்ளி அளவில் இயற்கை வேளாண்மை மற்றும் செலவில்லா வேளாண்மை என்ற தலைப்பிலும், மேல்நிலைப்பள்ளி அளவில் கூட்டுறவு அமைப்புகள் வாயிலாக மதிப்புக்கூட்டல் மற்றும் நிறுவன பெயரை பரவ செய்தல் என்ற தலைப்பிலும், கல்லூரி அளவில் பொது தனியார் கூட்டுறவு பங்களிப்பை வளர்த்தல் என்ற தலைப்பிலும் நடைபெற்றது. போட்டியின் நடுவர்களாக மொடக்குறிச்சி கள அலுவலர் சண்முகசுந்தரம், கூட்டுறவு சார்பதிவாளர் டீதர், கோபி கள அலுவலர் ஞானசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.