பொன்னேரி, நவ.14: வடசென்னை அனல் மின் நிலைய வாயிலில் ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த வட சென்னை அனல் மின் நிலையத்தில் தினமம் 1830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அனல் மின் நிலையத்தில் 1000க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள், தங்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும், ஊதிய உயர்வு, பண்டிகை கால போனஸ், பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், நிர்வாகம் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.