புழல், நவ. 14: சோழவரம் ஒன்றியம், பூதூர் ஊராட்சியில் முறையான பராமரிப்பு இல்லாமல் 5 குளங்கள் பாழாகி வருகின்றன. பொதுக்கழிப்பிடம் கட்டி கொடுக்கவும், பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டிக்கிடக்கும் குளங்களை தூர்வாரவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சோழவரம் ஒன்றியம், பூதூர் ஊராட்சியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பெருமாள் கோயில் தெருவில் ஒரு குளம் மற்றும் பூதூர்- நெற்குன்றம் சாலையில் உள்ள சொக்கான் குளம் உள்ளிட்ட 5 குளங்கள் உள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக இந்த குளங்களை சரியாக பராமரிக்காமல் விட்டதால் தற்போது புதர் மண்டிக்கிடக்கின்றன. குறிப்பாக சொக்கான்குளத்தை சுற்றிலும் உள்ள இடத்தை அப்பகுதி மக்கள் இயற்கை உபாதை கழிக்க பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இங்கு கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.