திருப்போரூர், நவ. 14: கணவருடன் ஏற்பட்ட தகராறில், குழந்தைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற தாய், தானும் தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் திருப்போரூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்போரூர் அடுத்த காயார் கிராமத்தை சேர்ந்தவர் விஜயரங்கன் (44), தனியார் கல்லூரி ஊழியர். இவரது மனைவி மஞ்சுளா (37). இவர்களுக்கு சர்மிளா (14), கிஷோர் (11) என்ற குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயரங்கன் குடித்து விட்டு வந்ததை தட்டிக் கேட்டதால் தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக கடந்த 11ம் தேதி இரவு வீட்டில் இருவரும் மீண்டும் சண்டை போட்டுள்ளனர். பின்னர் விஜயரங்கன் தூங்க சென்றுவிட்டார். நள்ளிரவில் திடீரென அலறல் சத்தம் கேட்டதால் திடுக்கிட்டு விஜயரங்கன் எழுந்து பார்த்தபோது, மனைவி மஞ்சுளா பாறாங்கல்லுடன் தனது அருகில் நின்றிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சுதாரித்துக்கொண்ட அவர் மனைவியை தள்ளி விட்டு தப்பினார். அப்போது நடந்த தள்ளுமுள்ளுவில் காயமடைந்த விஜயரங்கன், நெல்லிக்குப்பம் அருகே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்ப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.