தொழுப்பேடு சுங்கச்சாவடி அருகே சென்டர் மீடியனில் கார் மோதி சிறுமி உள்ளிட்ட இருவர் சாவு

மதுராந்தகம், நவ. 14: சென்னை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சலாவுதீன் (30). இவரது மனைவி பாத்திமா (28). இவர்களது மகள் யாசின் (7). 3ம் வகுப்பு மாணவி. பாத்திமாவின் அண்ணன் மீரான் மொய்தீன் (50). இவர்களது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர்.  நேற்று மாலை மீரான் மொய்தீன் தனது தங்கை மகளான யாசின் மற்றும் உறவினர்களான ஜமால் மொய்தீன் (50), ஷகீனா (40), முகமது (45), காஜா (40), மரியம் (35) மற்றும் முகமது அபி (4) ஆகிய 7 பேருடன் சென்னையில் இருந்து ஒரு நிகழ்ச்சிக்கு, காரில் திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.  

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அடுத்த தொழுப்பேடு சுங்கச்சாவடி அருகே சென்றபோது திடீரென காரின் முன்பக்க டயர் வெடித்து செண்டர்மீடியனில் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் சிறுமி யாசின் சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார். மீதி 7 பேரும் காயமடைந்தனர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் முகமது மீரான் இறந்தார். மற்ற 6 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: